கனடாவில், நண்பருடைய பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்றுகொண்டிருந்த இந்திய இளைஞர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
இந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்த குர்தீப் சிங் (27) மற்றும் ரன்வீர் சிங் (18) ஆகிய இருவரும், வெள்ளிக்கிழமை, அதாவது, டிசம்பர் மாதம் 12ஆம் திகதி, அதிகாலை 1.40 மணியளவில், கனடாவின் எட்மண்டனில், தங்கள் நண்பர் ஒருவருடைய பிறந்தநாள் பார்ட்டியில் பங்கேற்பதற்காக காரில் பயணித்துக்கொண்டிருந்துள்ளனர்.
இந்நிலையில், தென்கிழக்கு எட்மண்டனில் துப்பாக்கிச்சூடு நடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார், கார் ஒன்றிற்குள் குண்டடிபட்டு இளைஞர்கள் இருவர் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டுள்ளனர்.
மருத்துவ உதவிக்குழுவினர் உடனடியாக அவர்களுக்கு அவசர சிகிச்சையளித்தும் அவர்களைக் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள பொலிசார், குற்றவாளிகளைத் தீவிரமாக தேடிவருகின்றனர்.




