மீனவர்களை இந்திய தூதரகத்துக்கு எதிராக தூண்டிய கடற்றொழில் அமைச்சர் – சபா குகதாஸ் குற்றச்சாட்டு!

கடற்தொழில் அமைச்சர் மீனவர்களை தூண்டிவிட்டு யாழ். இந்திய தூதரகத்திற்கு எதிராக போராட்டம் செய்யுமாறு வற்புறுத்தியதாக ரெலோ கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளர் சபா சபா குகதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இன்றையதினம் அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய இழுவைப் படகுகளுக்கு எதிராக யாழில் நடைபெற்ற போராட்டத்தில், எதிர்காலத்தில் 5000பேரை திரட்டி போராட்டம் நடாத்தி யாழில் உள்ள இந்திய துணை தூதரகத்தை இல்லாது செய்வோம் என்றும், அமெரிக்கா மற்றும் சீன தூதரகத்தை யாழில் அமைப்போம் என்றும் மீனவர் ஒருவர் கருத்து தெரிவித்தார். அந்த ஒரு மீனவன் தெரிவித்த கருத்தானது இன்று ஒட்டுமொத்தமான மீனவர்களுக்கு மாத்திரமல்ல, குறிப்பாக வடக்கு – கிழக்கு தமிழ் மக்களுக்குரிய இராஜதந்திர நகர்வுகளில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தக் கூடிய வகையில் அமைந்துள்ளது.

இது பாரிய வேதனைக்குரிய விடயம் மாத்திரம் அல்ல, அவலங்களை சுமந்திருக்கின்ற எங்களுடைய தமிழ் மக்களை மீண்டும் ஒரு அவலத்திற்குள் தள்ள கூடிய செயற்படாகத்தான் அமைந்திருக்கின்றது.

இந்தக் கருத்துக்கு பின்னால் ஆளும் தரப்பு இருக்கின்றது என்ற விடயம் தெட்டத்தெளிவாக தெரிகின்றது. போராட்டத்தை நடத்திய மீனவர்கள் திங்கட்கிழமை (15) ஊடக சந்திப்பு ஒன்றினை நடாத்தி இருந்தனர். அதில் ஒரு விடயத்தை வெளிப்படையாக தெரிவித்து இருந்தனர்.

தற்போது இருக்கின்ற கடற்தொழில் அமைச்சர் தான் இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிடுங்கள் என வற்புறுத்துவதாக மீனவர்கள் நேற்றைய ஊடக சந்திப்பின்போது தெரிவித்தனர். இந்த விடயத்தை ஜனாதிபதி கவனத்தில் எடுக்க வேண்டும். ஏற்கனவே பாதிக்கப்பட்டு இருக்கின்ற எமது இனத்தை மீண்டும் இராஜதந்திர ரீதியில் நெருக்கடிகளுக்கு உள்ளாக்க கூடாது.

ஜனாதிபதி ஒரு நல்ல தீர்வு தருவார் என மக்கள் நம்புகின்றார்கள். அவர்கள் இவ்வாறு நம்பிக்கொண்டு இருக்கையில் ஆளும் தரப்பின் அமைச்சர ஒருவர் இவ்வாறு மக்களை வழிநடத்துவது என்பது என்னை பொறுத்தவரையில் ஒரு பாரிய தவறாகும். அதுமட்டுமல்ல இது ஒட்டுமொத்த நாட்டுக்குமே பிரச்சினை.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் வடக்கு மாகாண மீனவர்கள் தொழில் முதல்களை இழப்பதுடன் பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்குள்ளும் தள்ளப்படுகின்றனர். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் மீண்டும் இவ்வாறு அவலத்திற்கு உள்ளாகின்றனர். இந்த இழுவைமடி மீன்பிடி முறையானது இந்தியாவிலேயே தடை செய்யப்பட்ட ஒன்றாகவே காணப்படுகின்றது.

இலங்கை மற்றும் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சுகள் உடனடியாக பேச்சுவார்த்தை நடாத்தி இதனை ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டுமே தவிர பாதிக்கப்பட்ட இனத்தை தூண்டி மீண்டும் அவர்களை பிரச்சினைகளுக்குள் தள்ளி விடுவது ஆபத்தான விடயமாகும்.

ஏனெனில் பேரிடர் ஒன்று ஏற்பட்டபோது எமக்கு உடனடியாக கை கொடுத்தது பாரத தேசம். கடந்த காலத்தில் கோட்டாபயவின் ஆட்சியில் எமது நாடு வீழ்ச்சி அடைந்தபோது கூட அதை மீட்பதற்கு பாரத தேசமே உதவி புரிந்தது. எதிர்காலத்திலும் எமது தேசத்தை காட்டியெழுப்ப இந்திய தேசம் கரம் கொடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.