நாமலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞன்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்  தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  நாமல் ராஜபக்ஷவுடன், இளைஞர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மாத்தளை, லக்கல தேர்தல் தொகுதியில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள பாதுகாப்பு மையங்களை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று புதன்கிழமை (17) காலை பார்வையிட சென்றிருந்தார்.

இதன்போது அங்கு வந்த இளைஞன் ஒருவர் சத்தமிட்டு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.மேலும் அந்த பகுதியில் பாதுகாப்பான காணிகளை அடையாளம் காண்பதில் முறைகேடுகள் நடப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த நிலையில் குறித்த இளைஞருடன் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் நாமால் ராஜபக்ஷ “உங்களது அரசியலை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள், எனது அரசியலை நான் பார்த்துக் கொள்கிறேன்.

ஆனால், இந்த மக்களை மாதக்கணக்கில் முகாம்களில் வைத்திருக்க முடியாது. முதலில் அவர்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வைத் தேட வேண்டும்.

அரசாங்கம் அல்லது ஜனாதிபதி மீது ஏதேனும் குறைகள் இருந்தால் அதனை நாடாளுமன்றத்தில் பேசலாம் என்றும், இது மக்கள் துயரத்தில் இருக்கும் வேளையில் வாதிடுவதற்கான இடமல்ல என தெரிவித்தார்.

பின்னர், நாமலின் விளக்கத்தை ஏற்று அவரின் கருத்துக்களுக்கு இணங்கிய இளைஞன், இறுதியில் நாமல் ராஜபக்ஷவைக் கட்டித்தழுவி தனது அன்பை வெளிப்படுத்தினார்.

இது தொடர்பான காணொளியும் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி பரவி வருகிறது.