பொறுப்புகளிலிருந்து விலகுவது என்னுடைய நோக்கமல்ல. காலத்தின் தேவைக்கேற்ப ஸ்தாபன கட்டமைப்பில் சில மாற்றங்களை செய்ய வேண்டியது அவசியமாகும். இதை தவறான புரிதலுடன் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல்களை கவனத்தில் கொள்ள வேண்டியதில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் ஊடக அறிக்கையினூடாக இதனை தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) இந்திய வம்சாவளி மக்களின் உரிமைகளை நிலை நாட்டுவதற்காக எமது முன்னோர்களின் தியாகங்களினால் கட்டமைக்கப்பட்ட ஸ்தாபனமாகும். இதன் பொதுச்செயலாளர் என்ற வகையில் என்னுடைய பொறுப்புகளில் இருந்து விலகுவது என்னுடைய நோக்கமல்ல.
காலத்தின் தேவைக்கேற்ப ஸ்தாபன கட்டமைப்பில் சில மாற்றங்களை செய்ய வேண்டியது அவசியமாகும். இதை தவறான புரிதலுடன் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல்களை கவனத்தில் கொள்ள வேண்டியதில்லை. அந்த வகையில் ஸ்தாபனத்தை ஜனநாயக முறையில் மேலும் வலுப்படுத்துவதே எமது நோக்கம்.
இதன் அடிப்படையில் மூன்று மாதங்களுக்குள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை கூட்டப்பட்டு தேவையான மாற்றங்கள் குறித்து தீர்மானிக்கப்படும்.
மேலும், தற்போது கட்சியின் அங்கத்தவர்களுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றது. வெகு விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படும். இதன் மூலம் கட்சியின் செயற்பாட்டு வேகத்தையும் மக்கள் சேவையின் தரத்தையும் அதிகரிப்பதே எமது நோக்கமாகும்.
“சமூகத்திற்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படும் போது, ஸ்தாபனம் உறுதியுடன் முன்னேற்றப் பாதையில் பயணிக்கும்” என ஜீவன் தொண்டமான் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.





