“என் கேரக்டரை நீங்க புரிஞ்சுக்குங்க சார்” – ஸ்டாலினுக்கு விஜய் பதில்

‘என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்ளே’ என்று சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதைக் குறிப்பிட்டு அவருக்கு பதிலளிக்கும் வகையில், ‘‘என் கேரக்டரை நீங்க புரிஞ்சுக்குங்க சார்’’ என்று ஈரோடில் நடந்த கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசினார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த சரளை என்ற இடத்தில், தவெக தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தவெகவினர் பல ஆயிரம் பேர் திரண்டிருந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் பேசியதாவது: ஈரோடு மாவட்டத்தில் உள்ள காளிங்கராயன் பாசன கால்வாயை உருவாக்கிய காளிங்கராயர், பல ஆண்டுகளுக்கு முன்னரே நதிநீர் இணைப்புக்கு வித்திட்டவர். அவர், விவசாயிகள் நன்றாக இருக்க வேண்டும், மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று சிந்தித்து, பாசன திட்டத்தை நிறைவேற்றினார்.

அவர் காளிங்கராயன் கால்வாயை உருவாக்குவதற்கு, அவரது அம்மா தைரியம் கொடுத்தார். அம்மா கொடுக்கும் தைரியம் இருந்தால், எதையும் சாதிக்கலாம். இங்கு கூடியிருக்கும் அம்மா, அக்கா, தம்பி, தங்கை என எல்லோரும் கொடுக்கும் தைரியம் தான் என்னை சாதிக்க வைக்கிறது. அப்படிப்பட்ட எங்களை பிரிக்க அவதூறு பரப்பி, சூழ்ச்சி செய்கின்றனர். இது 10 வயதில் நான் சினிமாவுக்கு வந்தபோது ஏற்பட்ட உறவு, இதை யாராலும் பிரிக்க முடியாது.

பல ஆண்டுகளுக்கு முன்னரே, தொழில்நுட்பம் இல்லாத காலத்திலேயே இங்கு மக்களுக்காக பவானி ஆற்றின்மூலம் நீர்ப்பாசன திட்டத்தைக் கொண்டு வந்தவர் காலிங்கராயர். இன்று அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை விரிவுபடுத்தினால் 3 மாவட்டத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானவர்கள் பயனடைவார்கள். ஆனால், இன்றைய ஆட்சியாளர்கள் அதை செய்யவில்லை. வள்ளுவர் கோட்டத்தை அழகுபடுத்துவதை விட, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது முக்கியமில்லையா? கவர்மென்ட் நடத்துகிறார்களா? கண்காட்சி நடத்துகிறார்களா?

பெரியாரின் கொள்கைகள், அண்ணா, எம்ஜிஆர் ஆகியோரின் அரசியல் அணுகுமுறை எங்களுடையது. அண்ணாவும் எம்.ஜி.ஆரும் தமிழகத்தின் பொது சொத்து. அவர்கள் பெயரை பயன்படுத்தக்கூடாது என்று எவரும் சொல்ல முடியாது. தவெக எங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல என்று கூறிவிட்டு, ஏன் தவெக பற்றி புலம்புகிறீர்கள். எங்களை பார்த்து பயம் இல்லை என்று சத்தமாக கூறுகிறீர்கள், ஆனால், எங்களைப் பற்றி ஆட்களை வைத்து பேசுகிறீர்கள், முதலில் மண்டை மேல இருக்கிற கொண்டையை மறைங்க சார். உங்களுக்கு கொள்ளையடிச்ச காசு தான் துணை, எனக்கு இந்த மாஸ் (மக்கள்) தான் துணை.

பெரியார், தன்னிடம் இருந்த செல்வாக்கை வைத்து, காசு, பணம் சேர்க்கவில்லை, தன் குடும்பத்துக்கு பதவி கேட்கவில்லை. அப்படிப்பட்ட பெரியார் பெயரைச் சொல்லி கொள்ளையடிக்காதீங்க. எங்களுக்கு அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக. இது உங்களுக்கு (மக்களுக்கு) புரிந்தால் போதும். எங்களுக்கு எதிரி யார் என்று தெரியும். அவர்களை மட்டுமே எதிர்ப்போம். ஆனால், களத்திலேயே இல்லாத, களத்துக்கு வராதவர்களை எதிர்க்கிற யோசனையே இல்லை.

பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து திமுக மக்களை ஏமாற்றிவிட்டது. நீட் தேர்வு ரத்து செய்வோம், கல்விக்கடன் ரத்து செய்வோம், சிலிண்டருக்கு மானியம்கொடுப்போம் என கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. ஆறுகளை தூய்மைப்படுத்த பல ஆயிரம் கோடி ஒதுக்குவோம் என்றார்கள், ஆனால், ஆற்று மணலை தான் கொள்ளையடித்து வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தின் வளமான செம்மண் கொள்ளையடிக்கப்பட உள்ளது.

நான் காஞ்சிபுரத்தில் பேசியதை, திரித்து கூறுகின்றனர். எல்லோருக்கும் வீடு வேண்டும் என்றேன். உடனே, நாங்கள் ஏற்கனவே வீடு கட்டி கொடுத்திருக்கிறோம் என்கின்றனர். நான் கேட்கிறேன், இங்கு வந்து இருப்பவர்கள் எத்தனை பேர் வாடகை வீட்டில் வசிக்கிறீர்கள், உங்களுக்கு சொந்த வீடு இல்லை தானே. ஒவ்வொருவரும் டிகிரி படித்திருக்க வேண்டும் என்றால், எல்லோரும் உயர்கல்வி படிக்கிறார்கள் என்கின்றனர். ஆனால், பள்ளி இடை நிற்றல் அதிகமாக இருந்தது யாருடைய ஆட்சியில். அது மட்டுமா, மாணவர்கள் வருகை குறைவு என்று கூறி 207 பள்ளிகளை மூடியது யார். பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு தருவோம் என்றீர்களே, ஒரு லட்சம் பேருக்காவது வேலைவாய்ப்பு தந்தீர்களா. சிறு, குறுந்தொழிற்சாலைகளை நசுக்கும் வகையில் மின் கட்டணத்தை உயர்த்தினீர்கள்.

மக்களின் வரிப்பணத்தில், மக்களுக்கான சலுகைகளை வழங்குவதை எப்படி இலவசம் என்று கூறலாம்? மக்கள் நலத்திட்டங்களை வழங்குவதாகக் கூறும் நீங்கள், அவர்கள் வரிப்பணத்தில் கொடுப்பதைக் கூட, ஓசி என்று கொச்சைப்படுத்துகிறீர்கள். கேட்க ஆளில்லை என்று நினைத்தீர்களா, நான் இருக்கிறேன்.செங்கோட்டையன் நம்முடன் இணைந்தது நமக்கு மிகப்பெரிய பலம். செங்கோட்டையன் மாதிரி இன்னும் நிறையபேர் நம்முடன் இணைய உள்ளனர். அவர்கள் எல்லோருக்கும் உரிய அங்கீகாரத்தைக் கொடுப்போம்.

முதல்வர் சமீபத்தில் நடந்த கூட்டம் ஒன்றில், ‘என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்களே’ என்று பஞ்ச் டயலாக் பேசுகிறார். நான் பேசினால் சினிமா டயலாக் என்று கூறிவிட்டு, நீங்கள் பேசியது என்ன சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்த வரிகளா? நீங்க தான் என்னுடைய கேரக்டரை புரிந்து கொள்ளவில்லை, என் கேரக்டரை புரிஞ்சுக்குங்க சார். என்னுடைய கேரக்டர் என்றால், அது தமிழ்நாட்டு மக்களுடைய கேரக்டர். மத்தியிலும், மாநிலத்திலும் இருப்பவர்கள் வரப்போகும் 2026 சட்டப்பேரவை தேர்தலில், தமிழ்நாட்டு மக்களுடைய கேரக்டரை புரிந்து கொள்வீர்கள். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் விஜய்க்கு செங்கோட்டையன் வெள்ளி செங்கோல் வழங்கினார். விஜய்க்கு ‘புரட்சித் தளபதி’ என்ற பட்டத்தையும் செங்கோட்டையன் வழங்கினார்.

தீயசக்தி திமுக, தூயசக்தி தவெக: விஜய் பேசும்போது, ’’எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் திமுகவை ‘தீயசக்தி’ என்ற ஒரே வார்த்தையை சொல்லி காலி செய்தார்கள். நான்கூட யோசித்திருக்கிறேன். ஏன் இவ்வளவு கடுமையாக அவர்கள் திமுகவை விமர்சிக்கிறார்கள் என்று நினைத்தது உண்டு. ஆனால், அவர்கள் சொன்னது சரிதான். இப்போதுதான் புரிகிறது.

எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் கூறியதை நானும் ‘ரிபீட்’ செய்கிறேன். திமுக ஒரு தீயசக்தி, தீயசக்தி, தீயசக்தி. அதேநேரம், தவெக ஒரு தூயசக்தி. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தூயசக்தி தவெகவுக்கும் தீயசக்தி திமுகவுக்கும் இடையேதான் போட்டி. நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம். நல்லதே நடக்கும்’’ என்று ஆவேசமாகப் பேசினார்.