இலங்கை கடற்படையினர், பொலிஸ் மற்றும் பொலிஸ் அதிரடிப் படை ஆகியவையுடன் இணைந்து, கொழும்பு துறைமுகம் மற்றும் ராகமவில் உள்ள பெரலந்த பகுதியில் கடந்த 25 மற்றும் 29 ஆகிய திகதிகளில் கூட்டுத் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன் போது சட்டவிரோத விற்பனைக்காக தயார்நிலையில் வைத்திருந்த சுமார் 16,000 வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
அதன்படி, கொழும்பு துறைமுகத்தில், கொழும்பு துறைமுக காவல்துறையுடன் இணைந்து, மேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் ரங்கல நடத்திய நடவடிக்கையின் போது, சட்டவிரோத விற்பனைக்காக தயார்நிலையில் வைத்திருந்த 1000 வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒரு சந்தேக நபரும், ராகம பெரலந்த பகுதியில், கோனஹேன பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையுடன் இணைந்து இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நடத்திய நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக வைத்திருந்த 15,000 வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டனர்.
மேலும், இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட 54 மற்றும் 65 வயதுடைய சந்தேக நபர்கள் பெலியத்த மற்றும் ராகம பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், சந்தேக நபர்களையும் வெளிநாட்டு சிகரெடுகளையும் கொழும்பு துறைமுக காவல்துறையினரிடமும் ராகம காவல் நிலையத்திடமும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.





