எதிர்வரும்- 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, 21 ஆம் திகதி புதன்கிழமை ஆகிய தினங்களில் யாழ்ப்பாணம் தீவகம் வடக்கு ஊர்காவற்துறைப் பிரதேச செயலாளர் பிரிவில் எழுவைதீவு ஜே- 39 கிராம அலுவலர் பிரிவில் மூன்றாம் வட்டாரத்துக்குட்பட்ட பகுதியில் தமிழ்மக்களுக்குச் சொந்தமான காணிகள் சிறீலங்கா கடற்படையின் தேவைகளுக்குச் சுவீகரிப்பதற்காகப் பிரதேச நில அளவைத் திணைக்களக் காரியாலயத்தினரால் அளவீடு செய்யப்படவுள்ளது.
20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை-09 மணியளவில் தனியாருக்குச் சொந்தமான இரண்டு பரப்பு விஸ்தீரணமுடைய காணியும் , 21 ஆம் திகதி புதன்கிழமை காலை-09 மணியளவில் தனியாருக்குச் சொந்தமான 53 பேச்சர்ஸ் விஸ்தீரணமுள்ள காணியும் நில அளவீடு செய்யப்படவுள்ளதாகக் காணி உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகவிருந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் இதே தனியார் காணிகளைக் கடற்படையின் தேவைகளுக்காக அபகரிக்க முயன்ற போது காணி உரிமையாளர்கள், தீவகப் பகுதியைச் சேர்ந்த தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள், எழுவைதீவு மக்கள் ஆகியோர் இணைந்து தடுத்து நிறுத்தியிருந்தனர்.
இதேவேளை, மூன்று வருடங்களுக்கு முன்னர் குறித்த காணிகளை அபகரிப்பதற்காக ஒரேநாளில் நில அளவீடு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இம் முறை அடுத்தடுத்து வெவ்வேறு நாட்களில் நில அளவீடு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது தொடர்பில் தீவகப் பொது அமைப்புக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன.





