கொலம்பியாவில் நிகழ்ந்த விமான விபத்தில் எம்.பி. உட்பட 15 பேர் உயிரிழந்தனர். தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் வடகிழக்கில் நோர்டே டி சான்டாண்டர் மாகாணம் உள்ளது.
இதன் தலைநகர் குகட்டாவில் இருந்து மலைகளால் சூழப்பட்ட ஒகானா நகரை நோக்கி சிறிய விமானம் நேற்று முன்தினம் காலையில் உள்ளூர் நேரப்படி 11:42 மணிக்கு புறப்பட்டது.
கொலம்பியா அரசின் சட்டேனே விமான நிறுவனத்துக்கு சொந்தமான இந்த விமானத்தில் டியோஜெனெஸ் குயின்டெரோ என்ற எம்.பி. உள்ளிட்ட 13 பயணிகளும் 2 விமானிகளும் இருந்தனர். இந்த விமானம் ஒகானா சென்றடைய சுமார் 40 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும்.
இந்நிலையில் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அதனுடன் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் தொடர்பை இழந்தது. இதையடுத்து அந்த விமானம் கொலம்பியாவின் வடகிழக்கு கிராமப்புறத்தில் விழுந்து நொறுங்கியது தெரியவந்தது. உடனே அங்கு மீட்புக்குழு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் விமானத்தில் பயணம் செய்த எம்.பி. குயின்டெரோ உள்ளிட்ட 15 பேரும் விபத்தில் உயிரிழந்தனர்.





