92 Unl பெற்றோல் கப்பல் தொகை 05 பெறுகைக்கான நீண்டகால ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி

2026 மார்ச் 15 முதல்  செப்டம்பர் மாதம்  14 ஆம் திகதி வரை உள்ள ஆறு மாத காலப்பகுதிக்காக, 92 Unl பெற்றோல் கப்பல் தொகை 05 ஐ பெறுகை செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன்படி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தேவைக்காக 300,000 பால்கள் + 5 வீதம் கொண்ட 92 Unl பெற்றோல் கப்பல் தொகைகளை பெறுகை செய்வதற்காக, கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்ட விநியோகத்தர்களிடமிருந்து விலைமுறிகள் கோரப்பட்டிருந்தன.

இந்தப் பெறுகை செயல்முறையின் கீழ், மொத்தமாக ஆறு (06) விநியோகத்தர்கள்* விலைமனுக்களைச் சமர்ப்பித்துள்ளனர். சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து விலைமனுக்களும் உரிய நடைமுறைகளுக்கு அமைய மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர், உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவின் (High Level Standing Procurement Committee) விதந்துரைகள் பெறப்பட்டுள்ளன.

அந்த விதந்துரைகளின் அடிப்படையில், கணிசமான பதிலளிப்புக்களுடன் குறைந்தபட்ச விலையை முன்வைத்த சிங்கப்பூரைச் சேர்ந்த M/s Epdesa Pte. Ltd நிறுவனத்திற்கே குறித்த ஒப்பந்தத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, வலுசக்தி அமைச்சர் அமைச்சரவையில் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை முழுமையான ஒப்புதலை வழங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று திங்கட்கிழமை (02) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று (03) செவ்வாய்க்கிழமை அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ, இந்த முடிவை ஊடகங்களுக்கு அறிவித்தார்.

இந்த ஒப்பந்தம், நாட்டின் எரிபொருள் விநியோகத்தை தடையின்றி மேற்கொள்வதற்கும், நீண்டகால எரிபொருள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.