தீகல சமனுக்குச் சொந்தமான 2 கோடி ரூபா சொத்துகள் குற்றவரும்படி பிரிவினரால் முடக்கம்

போதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் தற்போது கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தீகல சமன் என்னும் அஜித் பெரேரா என்பவருக்குச் சொந்தமான, போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் ஈட்டப்பட்ட பணத்தில் கொள்வனவு செய்யப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 2 கோடி ரூபா பெறுமதிமிக்க வீடு, 9 ஏக்கர் காணி குற்றவரும்படி விசாரணைப் பிரிவினரால் முடக்கப்பட்டுள்ளன.

அவிசாவெலை பகுதியைச் சேர்ந்த தீகல சமன் என்னும் அஜித் பெரேரா போதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவிசாவெலை பகுதியில் குறித்த நபர் போதைப்பொருள் வர்த்தகம் உள்ளிட்ட சட்டவிரோதமான முறையில் சொத்துகளை ஈட்டியுள்ளதாகக் கிடைத்த முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை முன்னெடுத்திருந்த அதிகாரிகள், அச்சொத்துகளைப் பணச் சுத்திகரிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் 7 நாட்களுக்கு முடக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதற்கமைய, அவிசாவெலை இஹல தல்துவ பகுதியில் உள்ள சந்தேகநபருக்குச் சொந்தமானது எனத் தெரிவிக்கப்படும், 2 மாடி வீடு மற்றும் 9 ஏக்கர் காணி ஆகியன அதிகாரிகளால் முடக்கப்பட்டுள்ளன.

இச்சொத்துகள் சுமார் 2 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதிமிக்கவை எனக் குற்றவரும்படி விசாரணைப் பிரிவினரால் மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் குற்றவரும்படி விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.