ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான வழக்கறிஞர் அருளுக்கு மருத்துவ சிகிச்சைக்காக 8 வாரம் பிணை

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக பதவி வகித்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி ஒரு கும்பலால் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் அருளுக்கு மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பாக நடந்தது.

மனுதாரர் மற்றும் அரசு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: தேர்தல் நெருங்கும் நேரத்தில் தேர்தல் பணிக்கும் போலீஸாரை ஈடுபடுத்த வேண்டும் என்பதால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் கைதிகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்குவதற்கு சாத்தியமில்லை என்று காவல் ஆணையர்தரப்பில் கூறப்பட்டது நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

எனவே, ஸ்டான்லி மருத்துவமனை தந்துள்ள அறிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்கறிஞரான அருள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் வகையில் அவருக்கு 8 வார காலத்துக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது.

ஒருவேளை மருத்துவமனையில் அனுமதிக்கப்படாவிட்டால் தினமும் காலையில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். ஏப்.10 அன்று நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.