தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்புக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதனிடையே, தே.மு.தி.க. இடம்பெறும் கூட்டணி குறித்து ஜனவரி மாதமே அறிவிக்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்து இருந்த நிலையில், கூட்டணி குறித்து அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையே, தே.மு.தி.க. கூட்டணி தொடர்பாக தி.மு.க., அ.தி.மு.க. இடையே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பல்வேறு தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம் இணைந்துள்ளது. இதற்காக அண்ணா அறிவாலயம் வந்த பிரேமலதா விஜயகாந்த், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கூட்டணியை உறுதி செய்தார். இந்த சந்திப்பின்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்பி, அமைச்சர் கே.என். நேரு, எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.




