சட்டத்தரணிகளுக்கான பாதுகாப்பான சூழல் உறுதிப்படுத்தப்படவேண்டும்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரைச் சந்தித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி, சட்டத்தரணிகளுக்கான பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்தவேண்டியதன் அவசியம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

அக்குரேகொட பகுதியில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (13) இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் நடாத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் சட்டத்தரணி ஒருவரும், அவரது மனைவியும் கொல்லப்பட்ட சம்பவம் நாடளாவிய ரீதியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரியவுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ-பிரான்சேவுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள சட்டத்தரணிகள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பு தொடர்பில் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் ஐ.நா வதிவிடப்பிரதிநிதி, இச்சந்திப்பின்போது உரிய சட்ட செயன்முறையை வலுப்படுத்தவேண்டியதன் அவசியம், சட்டத்தரணிகளுக்கான பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்துதல் மற்றும் சர்வதேச நியமங்களுக்கு ஏற்புடைய வகையில் புதிய சட்டங்கள் தயாரிக்கப்படுவதில் சட்டத்தரணிகள் சங்கத்தின் வகிபாகம் உள்ளிட்ட விடயங்கள் பற்றி விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.