அவுஸ்திரேலியாவின் மேற்கு சிட்னி பகுதியில் சமூக சேவையில் ஈடுபட்டு வரும் சமூக ஆர்வலர் மற்றும் தொண்டு நிறுவனர் மோசஸ் வேதமுத்து, பரமட்டா 2026 ஆம் ஆண்டின் சிறந்த குடிமகன் (Citizen of the Year) விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பரமட்டா மற்றும் மேற்கு சிட்னி பகுதிகளில் உதவி தேவைப்படும் மக்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் அவரது சேவையை பாராட்டி, ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது. இந்த விழா பரமட்டா டவுன் ஹாலில் நடைபெற்றது.
மோசஸ் வேதமுத்து SOHAS அறக்கட்டளையின் (Support for Homeless and Asylum Seekers) நிறுவனர் மற்றும் தலைவராக செயல்பட்டு வருகிறார்.
அவரது தலைமையில், வீடற்றவர்கள், புகலிடம் கோருவோர், சர்வதேச மாணவர்கள், புலம்பெயர்ந்தோர் மற்றும் முதியோர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினருக்கு ஆதரவு வழங்கும் பல்வேறு சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அவரது அர்ப்பணிப்பான சமூகப் பணியை முன்னிட்டு, வருடாந்திர குடிமகன் விருது வழங்கும் விழாவில் அவருக்கு இந்த உயரிய விருது வழங்கப்பட்டது.
இந்த விருதைப் பெற்றது குறித்து கருத்து தெரிவித்த அவர்,
“ஆண்டின் சிறந்த குடிமகனாக தேர்வு செய்யப்பட்டது எனக்கு மிகுந்த பெருமையும் பொறுப்பும் அளிக்கிறது. இது எனது சேவையை மேலும் சிறப்பாக செய்யும் உந்துதலை அளிக்கிறது” என கூறினார்.
மேலும் அவர் கூறுகையில்,
“ஒரு நல்ல குடிமகனாக இருப்பது என்பது, சமூகத்தின் நலனுக்காக பொறுப்புடன் செயல்படுவதாகும். நமது சிறிய செயல்களே தேவைப்படுபவர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை நான் நம்புகிறேன்.
இந்த விருது எனது சேவை, பொறுப்பு மற்றும் நேர்மறையான மாற்றத்தை உருவாக்கும் உறுதியை பிரதிபலிக்கிறது” என்று தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவின் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும், சமூக சேவையில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் மோசஸ் வேதமுத்துவின் இந்த சாதனை, தமிழர் சமூகத்திற்கு பெருமை சேர்க்கும் ஒன்றாகும்.





