தேசிய மக்கள் சக்தி தமது தோழர்கள் செய்யும் ஊழல் மற்றும் மோசடிகளைப் பாதுகாப்பதைக் கைவிட வேண்டும் என்றும், எதிர்க்கட்சிகள் தூங்கிக் கொண்டிருக்காமல் முறையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் மின்சாரத்தைப் பயன்படுத்துவோர் சங்கத்தின் தலைவர் எம்.டி.ஆர். அதுல வலியுறுத்தியுள்ளார்.
மின்சாரத்தைப் பயன்படுத்துவோர் சங்கத்தின் காரியாலயத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
ஊழல் மற்றும் மோசடிகளை ஒழிக்கப் போவதாகக் கூறும் வசந்த சமரசிங்க உள்ளிட்ட குழுவினரும், ஏனைய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் வெறும் பேச்சுடன் நின்று விடக் கூடாது. எதிர்க்கட்சியினர் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள், ஆளுங்கட்சியினரோ எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.
நீங்கள் உண்மையாகவே ஊழலை எதிர்க்கிறீர்கள் என்றால், உடனடியாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்குச் சென்று முறைப்பாடு செய்யுங்கள். தினமும் அங்கு சென்று இந்த விவகாரத்தைக் கிளற வேண்டும். தற்போது அதிக விலைக்கு நிலக்கரியைக் கொள்வனவு செய்துவிட்டு, அதிலிருந்து மிகக் குறைந்த அளவு மின்சார அலகுகளையே உற்பத்தி செய்கிறார்கள்.
இது நாட்டுக்கு இருமடங்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. பொதுவாக 75000 தொன் நிலக்கரி எரிக்கப்பட வேண்டிய இடத்தில், தற்போது தரம் குறைந்த நிலக்கரி காரணமாக அதைவிட அதிகளவு எரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நிலக்கரி எரிப்பின் போது வெளியேறும் சாம்பலின் அளவு பொதுவாக 16% ஆக இருக்க வேண்டும். ஆனால் தற்போது அது 22% ஆக உயர்ந்துள்ளது. இந்த அதிகப்படியான கழிவுகள் முறையாக அகற்றப்படாமல் சுற்றுச்சூழலில் கலக்கவிடப்படுகின்றன. இதனால் அப்பகுதி வாழ் உயிரினங்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதுடன், முக்கிய புனிதப் பகுதிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது, என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.





