தேர்தல் வந்துவிட்டாலே பாஜக ‘ஐஸ்’ பயன்படுத்த தொடங்கிவிடும் என திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
தூத்துக்குடியில் நேற்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் வேலூர் மக்களை இன்னும் சந்திக்க வேண்டியதுள்ளது. அவர்களது கருத்துகளை கேட்டறிந்த பிறகு விரைவில் திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். ஓபிஎஸ் திமுக கூட்டணிக்கு வருவாரா என்பது தொடர்பான அறிவிப்பு ஏதும் இருந்தால், அதனை முதல்வர் வெளியிடுவார்.
கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை எப்போதுமே சுமூகமாகத்தான் இருந்திருக்கிறது. ஏனென்றால், இது நீண்ட நாளாக இருக்கக்கூடிய உறவு. அதோடு கொள்கைக்காக உருவாகி இருக்கக்கூடிய கூட்டணி எங்கள் கூட்டணி. எனவே, நிச்சயமாக எந்த பிரச்சினையும் இல்லாமல் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது குறித்த கேள்விக்கு, ‘தேர்தல் வந்துவிட்டால் பாஜக ‘ஐஸ்’ (ICE) பயன்படுத்த தொடங்கிவிடும். அதாவது, இன்கம்டாக்ஸ் (வருமான வரித்துறை), சிபிஐ மற்றும் ஈடி (அமலாக்கத்துறை) ஆகியவற்றை பயன்படுத்த ஆரம்பித்து விடுவார்கள். அந்த வேலையை தற்போது தமிழ்நாட்டிலும் தொடங்கியுள்ளனர்’ என கனிமொழி பதிலளித்தார்.




