மறைந்த நல்லகண்ணு உடலுக்கு தவெக தலைவர் விஜய் நேரில் அஞ்சலி!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மூத்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு தவெக தலைவர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருக்கிறார். தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துடன் சிபிஐ அலுவலகம் வந்த விஜய், நல்லகண்ணு உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதேபோல் அங்கிருந்த சிபிஐ கட்சியினருக்கும் ஆறுதல் கூறினார்.

வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களாகவே நல்லகண்ணு உடல்நிலை மோசமாகி வந்த சூழலில், இன்று மதியம் 1.55 மணியளவில் உயிரிழந்தார். இதனால் தமிழ்நாடு முழுக்க பல்வேறு தரப்பினரும் சோகத்தில் இருக்கின்றனர்.

சாமானிய மக்களும் கூட நல்லகண்ணுவுக்கு இரங்கல் பதிவிட்டு வருகின்றனர். அதேபோல் நல்லகண்ணுவுக்கு கட்சி பேதமின்றி அத்தனை கட்சிகளும் இரங்கல் தெரிவித்துவிட்டன. இதையடுத்து நல்லகண்ணு உடல் மக்களின் இறுதி அஞ்சலிக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகமான பாலன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இதன்பின் ஆயிரக்கணக்கானோர் நல்லகண்ணு உடலுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, ஆ.ராசா, நடிகர் சத்யராஜ், விஜய் சேதுபதி, கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலரும் இறுதி மரியாதை செலுத்தினர். அதேபோல் தவெக சார்பாக ஆதவ் அர்ஜுனா மற்றும் சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோர் நல்லகண்ணு உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் சிபிஐ அலுவலகத்திற்கு வந்து நல்லகண்ணு உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அங்கிருந்த சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியனுக்கும் ஆறுதல் தெரிவித்தார். அப்போது விஜய்யுடன் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் இருந்தார். சில நிமிடங்கள் அங்கிருந்த விஜய், இறுதி மரியாதை செலுத்திவிட்டு உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.