அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது துப்பாக்கிதாரியுடன் கைது செய்யப்பட்ட ஏனைய இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் மார்ச் மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த இரட்டைக் கொலைச் சம்பவத்திற்காக துப்பாக்கிதாரிகள் பயணித்த மோட்டார் காரைச் செலுத்திய சாரதி மற்றும் தாக்குதலின் பின்னர் துப்பாக்கிதாரிகளுக்குத் தங்குமிட வசதிகளைச் செய்து கொடுத்த நபர் ஆகிய இருவருமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் கைது செய்யப்பட்ட இரண்டாவது துப்பாக்கிதாரியான கடற்படையின் முன்னாள் வீரர், ஏற்கனவே பெற்றுக்கொள்ளப்பட்ட 72 மணிநேர தடுப்புக் காவல் உத்தரவின் அடிப்படையில் மேற்கு தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.
மொனராகலை பகுதியில் மறைந்திருந்த போது நேற்றைய தினம் வியாழக்கிழமை (26) கைது செய்யப்பட்ட இவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, பாதாள உலகக் குழுத் தலைவன் ‘கரந்தெனிய சுத்தா’வின் நேரடித் தொடர்பு மற்றும் முன்னைய பல கொலைச் சம்பவங்கள் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




