ஈரானின் இடைக்கால உயர் தலைவர் அலிரேசா அராஃபி வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டாரா?

ஈரானின் இடைக்கால உயர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அலிரேசா அராஃபி, தனது கடமையை பொறுப்பேற்று 24 மணிநேரம் நிறைவடைவதற்கு முன்னரே, வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக, சரிபார்க்கப்படாத சில சமூக ஊடகங்கள் வெளியிட்டு வரும் செய்திகள் வைரலாகி, சர்வதேச மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், அலிரேசா அராஃபி கொல்லப்பட்டதாக பரப்பப்பட்ட செய்தி, ஈரானிய அரசு ஊடகங்களாலோ சர்வதேச செய்தி நிறுவனங்களாலோ உறுதிப்படுத்தப்படவில்லை.

ஈரானின் உயர் தலைவரான அலி காமேனி இஸ்ரேல் – அமெரிக்கத் தாக்குதலில் கொல்லப்பட்டதையடுத்து, அலிரேசா அராஃபி இடைக்கால உயர் தலைவராக நேற்று (1) நியமிக்கப்பட்டார்.

மேலும், அலிரேசா அராஃபி வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ரெடிட் மற்றும் பிற சமூக ஊடகங்களில் வெளியாகி வரும் செய்தி, தெஹ்ரானில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதோடு, சர்வதேசம் முழுவதும் உள்ள நாடுகளின் அரசாங்கங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல், லெபனான் முதலான நாடுகளில் இடம்பெற்று வரும் மோதல்கள், தாக்குதல்களுக்கு மத்தியில் வெளிக்கிளம்பியுள்ள, ஈரானின் இடைக்கால உயர் தலைவர் அலிரேசா அராஃபி தொடர்பான கூற்று, உறுதிப்படுத்தப்படாத நிலையில், அது, வதந்தியாகவே இருப்பதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.