மின்சார சபை தனியார் மயப்படுத்தப்படவில்லை. திறைச்சேரிக்கு சொந்தமான அரச நிறுவனங்களிடமே பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போது மின்சாரசபையின் சேவையாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.மின்சாரத்துறையை வினைத்திறனாக்குவதற்காக கட்டமைப்பில் மாத்திரமே மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்தார்.
இலங்கை மின்சாரசபை மறுசீரமைக்கப்பட்டமை தொடர்பில் திங்கட்கிழமை (9) விசேட அறிவிப்பை விடுத்து மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.இலங்கை வரலாறு
அவர் மேலும் தெரிவித்ததாவது,
இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் பணிகள் நேற்றுடன் வெற்றிகரமாக முடிவடைந்தது.நூற்றுக்கு நூறு சதவீதம் அரசுக்கு சொந்தமான பங்குகளைக் கொண்டுள்ள நான்கு அரச நிறுவனங்களிடமும், இரண்டு இணை நிறுவனங்களிடமும் மின்சார சபையின் விடயதானங்கள் பொறுப்பாக்கப்பட்டுள்ளன.
மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போது மின்சாரசபையின் சேவையாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.பல்வேறு காரணிகளின் நிமித்தம் சுய விருப்பத்தின் அடிப்படையில் சேவையில் இருந்து ஓய்வுப்பெறும் தீர்மானத்தை அறிவித்தவர்களுக்கு சேவை காலத்தை அடிப்படையாகக் கொண்டு போதுமான இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கம் மின்சாரசபையை 12 கூறுகளாக பிரித்து, 12 ஆயிரம் பேரை சேவையில் இருந்து நீக்குவதற்கு தீர்மானித்து அதற்குரிய வகையில் சட்டத்தையும் இயற்றியது. இந்த சட்டத்தை திருத்தம் செய்து புதிய உள்ளடக்கங்களுடன் மின்சாரசபை மறுசீரமைக்கப்பட்டுள்ளது.
மின்சார சபையின் உரித்தை முழுமையாக அரச நிறுவனம் ஊடாக பாதுகாத்துக்கொண்டு இந்த மறுசீரமைப்பு பணியை நிறைவு செய்துள்ளோம் என்பதை வெளிப்படையாக குறிப்பிட முடியும். மின்சார சபை தனியார் மயப்படுத்தப்படவில்லை. திறைச்சேரிக்கு சொந்தமான அரச நிறுவனங்களிடமே பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
மறுசீரமைப்புக்கான நடவடிக்கைகள் குறித்து கடந்த ஒரு ஆண்டுகாலமாக சகல தரப்புடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். சுமார் 42 மின்சார தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி அவர்களின் யோசனைகளை மறுசீரமைப்புக்குள் உள்ளடக்கியுள்ளோம்.
நட்டத்தில் இயங்கும் மின்சாரசபையை மறுசீரமைத்து அதன் உச்சபயனை நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டும். மின்சாரத்துறை வினைத்திறனான வகையில் பொதுமக்களுக்கு சேவை வழங்க வேண்டும் என்பதற்காகவே இந்த மறுசீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
மறுசீரமைப்பினால் மின்சாரசபையின் சேவையாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. புதிய நிறுவன கட்டமைப்புக்குள் இவர்கள் சேவைக்குள் உள்வாங்கப்படுவார்கள்.கட்டமைப்பில் மாத்திரமே மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.



