நாட்டின் இரு வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, பண்டாரகம – கெஸ்பாவ வீதியில் திங்கட்கிழமை (09) மதியம் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கெஸ்பாவ நோக்கி பயணித்த லொறி ஒன்று, வீதியைக் கடக்க முயன்ற பாதசாரி பெண் மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இதன்போது வேக கட்டுப்பாட்டை இழந்த லொறி, அருகிலிருந்த வர்த்தக நிலையம் ஒன்றின் மீதும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றின் மீதும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த பாதசாரி பண்டாரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் கிதெல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலாவ – கெக்கிராவ வீதியில் 36ஆம் மைல்கல் தூணுக்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று திங்கட்கிழமை (09) மதியம் கெக்கிராவ நோக்கி அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர் மஹஇலுப்பல்லம பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





