‘‘ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு மக்களுடன் இணையுங்கள்’’ – ஈரான் படைகளுக்கு பட்டத்து இளவரசர் கோரிக்கை

“ஈரானின் தற்போதைய ராணுவம் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு மக்களுடன் இணைய வேண்டும். அவ்வாறு செய்தால், சுதந்திரமான ஈரானில் அவர்களுக்கு ஒரு இடம் கிடைக்கும்” என்று ஈரானின் நாடுகடத்தப்பட்ட பட்டத்து இளவரசர் ரெஸா பஹ்லவி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள ஈரான் பட்டத்து இளவரசர் ரெஸா பஹ்லவி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “ஈரானில் மக்களால் நடத்தப்பட்ட லயன் மற்றும் சூரிய புரட்சி ஆகியவை வீரத்தின் உச்சபட்ச பாராட்டுக்குரியது. அப்போது தெருவில் சுடப்பட்டு காயமடைந்த ஒருவரை தீயணைப்பு வீரர் தூக்கிச் சென்றார். ஆனால், அவரையும் அவர்கள் கொன்றனர். அது எனக்கு மறக்க முடியாதது.

ஈரான் புரட்சிகரப் படைகளை அழித்து இஸ்லாமியக் குடியரசின் பயங்கரவாத உள்கட்டமைப்பை அகற்றுவதற்கான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தீர்மானத்திற்கு ஈரானிய மக்களின் பரந்த ஆதரவு உள்ளது. தற்போதைய ஆட்சி ஈரானியர்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்துவது மனிதகுலத்திற்கு எதிரான குற்றமாகும். பொதுமக்களின் பாதுகாப்பும், ஈரானின் தேசிய உள்கட்டமைப்பின் பாதுகாப்பும் நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும்.

ஈரானின் தற்போதைய ராணுவம் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு மக்களுடன் இணைய வேண்டும். நீங்கள் அவ்வாறு செய்தால், சுதந்திரமான ஈரானில் உங்களுக்கு ஒரு இடம் கிடைக்கும்” என்றார்