இலங்கை கடல் எல்லைக்கு அருகாமையில் இருந்த ஈரான் போர் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் குறித்து இலங்கைக்கு முன்கூட்டியே எவ்வித அறிவித்தல்களும் வழங்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இச்சம்பவம் குறித்து அவர் மேலும் கூறியதாவது:
அமெரிக்க பாதுகாப்புத் தரப்பினரால் இந்தத் தாக்குதல் குறித்து இலங்கைக்கு எவ்விதமான முன்னெச்சரிக்கையோ அல்லது தகவலோ வழங்கப்படவில்லை. பொதுவாக இரு நாடுகளுக்கு இடையே போர் நிலவும் போது, ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதை மூன்றாம் தரப்பு நாடு ஒன்றுக்கு முன்கூட்டியே அறிவிப்பார்கள் என்று தாம் கருதவில்லை.
கடற்படைக்கு இந்தத் தகவல் எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து தமக்குத் துல்லியமாகத் தெரியாது எனக் குறிப்பிட்ட அமைச்சர், அந்தப் பகுதியில் சில சடலங்கள் மற்றும் உயிர் காக்கும் அங்கிகள் மிதப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே எமது கடல்சார் மீட்பு நிலையத்திற்கு செய்தி கிடைத்தது.
இந்தச் சம்பவத்தின் போது 32 பேர் உயிர் பிழைத்திருந்தனர். ஒரு தொகுதியினர் காணாமல் போயுள்ளதுடன், சில சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. எனினும், இந்தத் தாக்குதல் குறித்த உத்தியோகபூர்வ செய்தி எங்கிருந்து வந்தது என்பதை தம்மால் உறுதிப்படக் கூற முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.





