அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து, ஈரான் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் தங்கள் எல்லையை ஒட்டியுள்ள ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் கச்சா எண்ணெய் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியை இந்திய எண்ணெய் கப்பல்கள் கடந்து வருவதற்கு பாதுகாப்பு அளிக்க கடற்படை கப்பல்களை அனுப்புவது குறித்து இந்தியா பரிசீலித்து வருவதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் தெரிவிக்கிறது.
கடற்படை பாதுகாப்பு வேண்டும் என இந்திய கப்பல் உரிமையாளர்கள் விடுத்த கோரிக்கையை தொடர்ந்து அது குறித்து இந்தியா பரிசீலித்து வருகிறது என இந்தியாவின் முக்கிய கடல்சார் ஆணையத்தின் மூத்த அதிகாரி கேப்டன் பி.சி.மீனாவை மேற்கோள் காட்டி அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய மாலுமிகள், கடல் சார் சொத்துகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கப்பல் போக்குவரத்து இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் சர்வானந்த சோனோவால் அண்மையில் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.





