இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்தில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, “டித்வா” (Ditva) சூறாவளியினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 125 பெண்களுக்குப் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
‘ஹீலிங் ஸ்ரீலங்கா’ (Healing Sri Lanka) திட்டத்தின் கீழ், பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளின் உளசமூக மேம்பாட்டிற்காக வழங்கப்பட்டுவரும் ஆதரவு முறைகள் குறித்து இதன்போது மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் விளக்கமளித்தார்.
அத்துடன், இலங்கை பெண்களுக்கு இடையிலான சகோதரத்துவத்தின் முக்கியத்துவம் குறித்தும், குறிப்பாக மிகவும் கடினமான தருணங்களில் ஒருவருக்கொருவர் துணையாக நிற்பது குறித்தும் உரையாற்றினார்.
சிதைந்துபோன நம்பிக்கைகளை பெண்களின் அசைக்க முடியாத சக்தி மற்றும் மீளெழுச்சித் திறனின் மூலம் மீண்டும் கட்டியெழுப்புவதற்கு, அவர்களின் முழுமையான பங்களிப்பை வழங்குமாறு அமைச்சர் இதன்போது அழைப்புவிடுத்தார்.
இந்நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் உதித கயாஷான், ஏனைய கௌரவ விருந்தினர்கள், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சிங்களச் சேவைப் பணிப்பாளர் திருமதி லலானி விக்ரமராஜா மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.












