ஜேர்மன் பள்ளி ஒன்றிலிருந்து காவல் துறைக்கு வந்த வித்தியாசமான அழைப்பு

ஜேர்மனியில், 7 வயது சிறுவன் ஒருவன் தொடர்பில் பொலிசாருக்கு வித்தியாசமான அழைப்பு ஒன்று வந்தது.நேற்று முன்தினம் காலை, ஜேர்மனியின் Osnabrück நகரிலுள்ள பள்ளி ஒன்றிலிருந்து வந்த அழைப்பைத் தொடர்ந்து, பொலிசார் அங்கு விரைந்துள்ளனர்.

விடயம் என்னவென்றால், வகுப்பு ஒன்றில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியை ஒருவர், பிள்ளைகள் தங்களுக்குள் ஏதோ ரகசியமாக பேசிக்கொண்டிருப்பதை கவனித்துள்ளார்.

என்னவென்று விசாரித்தால், பிள்ளைகள் பலருடைய கையில் பணத்தாள்கள் இருந்துள்ளன.

உடனடியாக ஆசிரியை பொலிசாரை அழைக்க, பொலிஸ் விசாரணையில், அந்த வகுப்பில் படிக்கும் ஒரு 7 வயது சிறுவன், தன் வீட்டிலிருந்த பணம் அடங்கிய கவர் ஒன்றை எடுத்துக்கொண்டு வந்தது தெரியவந்தது.

அவனது பெற்றோர் கார் வாங்குவதற்காக வங்கியிலிருந்து 5,000 யூரோக்கள் எடுத்துவந்துள்ளார்கள்.

ஜேர்மன் பள்ளி ஒன்றிலிருந்து பொலிசாருக்கு வந்த வித்தியாசமான அழைப்பு | 7 Year Old Flashes 5 000 Euro At Germany School

பணம் அடங்கிய கவரை இந்தச் சிறுவன் பள்ளிக்கு எடுத்துக்கொண்டுவந்துவிட்டான்.

பொலிசார் அந்தச் சிறுவனின் பெற்றோரை அழைத்து மாணவர்கள் வைத்திருந்த பணத்தை சேகரித்து அவர்களிடம் கொடுத்துள்ளார்கள்.

பொலிசார் தங்கள் குறிப்பேட்டில், 5,000 யூரோக்களை வீட்டிலிருந்து எடுத்துவந்த பையன் ஒரே நாளில் பள்ளியில் பிரபலமடைய, பொலிசார் பெற்றோரைஅழைக்க, பணம் திரும்பக் கிடைத்ததால் அவர்களுக்கும் மகிழ்ச்சி, பையனுக்கும் மகிழ்ச்சி, ஒரு பிரச்சினையும் இல்லை, எல்லாம் நல்லபடியாக முடிந்தது என வித்தியாசமான அறிக்கை ஒன்றை எழுதிவைத்துள்ளார்கள்.

5,000 யூரோக்கள் என்பது இலங்கை மதிப்பில் 17,96,400.00 ரூபாய் ஆகும்.