கொட்டதெனியாவ மற்றும் அஹுங்கலவில் பெரும் தொகை போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

கொட்டதெனியாவ மற்றும் அஹுங்கல ஆகிய பகுதிகளில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனைகளின் போது, ‘ஹெரோயின்’ மற்றும் ‘ஐஸ்’  போதைப்பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொட்டதெனியாவ – ஹப்புவலான பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை  (15) இரவு முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, 225 கிராம் ஹெரோயின் மற்றும் 165 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் ஹப்புவலான பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, அஹுங்கல்ல – கமகரணவத்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட மற்றுமொரு சோதனையின் போது, 261 கிராம் 620 மில்லி கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், சந்தேகநபர்கள் இருவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.