பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் சகோதரர் விபத்தில் உயிரிழந்தார்

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் சகோதரரான குருகுலசூரிய முதியன்சலாகே பியசேன, ஞாயிற்றுக்கிழமை (15) அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாதுவ,

ஓய்வுபெற்ற இராணுவ வீரரான பியசேன, நான்கு பிள்ளைகளின் தந்தையாவார். கடந்த 14 ஆம் திகதி கல்கமுவ, பாலு சியம்பலேவ பகுதியில் உள்ள தனது மற்றுமொரு சகோதரரின் வீட்டில் நடைபெற்ற குடும்ப நிகழ்வொன்றில் கலந்துகொண்டு அங்கேயே தங்கியுள்ளார்.

நேற்றைய தினம் அதிகாலை 5.50 மணியளவில் மீண்டும் தனது இல்லத்திற்குத் திரும்புவதற்காக அநுராதபுரம் – பாதெனிய பிரதான வீதியில் வாகனத்தைச் செலுத்திச் சென்றபோது, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் எதிர்பாராதவிதமாக வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் படுகாயமடைந்த அவர் உடனடியாக கல்கமுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஏழு உடன்பிறப்புகளைக் கொண்ட அமைச்சரின் குடும்பத்தில், இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீதியோரத்தில் லொறியை நிறுத்தி வைத்திருந்த சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று திங்கட்கிழமை (16) கல்கமுவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கல்கமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.