மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள போரினால் சுற்றுலாத்துறை பாரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதுடன், நாளொன்றுக்கு சுமார் 5 இலட்சம் அமெரிக்க டொலர் வருமான இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் ஆங்கில ஊடகமொன்றுக்கு மேலும் தெரிவிக்கையில்,
போர் ஆரம்பமானது முதல் நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் நாளொன்றுக்கு 2,500 முதல் 3,000 வரையிலான வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இம்மாதத்தின் முதல் எட்டு நாட்களில் மாத்திரம் 47,646 சுற்றுலாப் பயணிகளே வருகை தந்துள்ளனர். இது 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 30 சதவீத வீழ்ச்சியாகும்.
குறிப்பாக ஐரோப்பிய நாடுகளிலிருந்து மத்திய கிழக்கு ஊடாகப் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகளின் வருகை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு வான்வெளிகள் மூடப்பட்டுள்ளதால், சர்வதேச விமானப் போக்குவரத்து பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஐரோப்பிய நாடுகளுக்கான பயணங்களை ஆப்கானிஸ்தான் மற்றும் அஜர்பைஜான் வான்பரப்புகள் ஊடாக மாற்றுப் பாதையில் முன்னெடுத்து வருகின்றது. இதன் காரணமாகப் பயண நேரம் ஒன்றரை மணித்தியாலங்கள் வரை அதிகரித்துள்ளதுடன், எரிபொருள் செலவும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.




