ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான துப்பாக்கிதாரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2025.07.03 அன்று ராகம, படுவத்த பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு முன்னால் மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர், நபர் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு அவரைக் கொலை செய்தனர்.
இது தொடர்பில் பேலியகொடை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வந்தனர்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி நேற்று (17) மாலை இங்கிரிய பொலிஸ் பிரிவில் வைத்து பேலியகொடை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாதம்பே பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக ராகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேலும், இந்த சம்பவம் குறித்து ராகம பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.





