சிலாபம் மற்றும் பொல்பித்திகம பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (17) பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனைகளின் போது, சட்டவிரோத மதுபானம் மற்றும் அதனைத் தயாரிக்கும் உபகரணங்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தித்தகடை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டது.
இதன்போது 93 லீற்றர் சட்டவிரோத மதுபானம் (125 போத்தல்கள்), மதுபானம் தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 620 லீற்றர் ‘கோடா’ மற்றும் காய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தித்தகடை பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, பொல்பித்திகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்துரஸ்ஸ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு சோதனையின் போது, 78 லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் (105 போத்தல்கள்) சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் பொல்பித்திகம பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.





