விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்கும் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் நாட்டின் அனைத்து விவசாயிகளுக்கும் தேவையான எரிபொருளை தட்டுப்பாடின்றி பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக விவசாயத்துறை பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (19) வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் இரத்தினபுரி மாவட்ட எம். பி . பீ ஆரியவன்ச எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பதிலளிக்கையில்,
விவசாய அமைப்புகள் மூலமாக விவசாயிகளுக்கு தேவையான எரிபொருளை வழங்குவதற்கு விசேட திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு தேவையான போதுமானளவு எரிபொருளை எரிபொருள் நிலையங்கள் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்
பரல்களிலோ அல்லது கலன்களிலோ எவ்வாறாயினும் விவசாய சங்கங்கள் எரிபொருளை பெற்றுச் சென்று விவசாயிகளுக்கு வழங்க முடியும் . அதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
விவசாய சமூகத்தினருக்கு எரிபொருள் வழங்குவதற்காக காணப்பட்ட சட்டம் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கு கூப்பன் மற்றும் விவசாய அமைப்புகளின் உறுதிப்படுத்தல் மட்டுமே தேவையாக உள்ளது.
இந்த சட்டத்தை தளர்த்துவதற்கு முன்பதாக பிரதேச செயலாளர், மாவட்டச் செயலாளர், விவசாய அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் உறுதிப் படுத்தல் அவசியமாக இருந்தது என்றது என்றார்.





