யுத்தகால மீறல்களில் முன்னாள் இராணுவத்தளபதி தயா ரத்நாயக்கவின் வகிபாகம் என்ன?

இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியிலும், அதன் பின்னரும் நிகழ்த்தப்பட்ட மீறல் குற்றங்களில் முன்னாள் இராணுவத்தளபதி (ஓய்வுபெற்ற) தயா ரத்நாயக்கவின் வகிபாகம் தொடர்பான விரிவான அறிக்கையொன்றை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் வெளியிட்டுள்ளது.

இவ்வறிக்கையில் கிழக்கு மாகாணத்தில் இராணுவ நடவடிக்கைகளின்போது பொதுமக்கள் சட்டவிரோதமாகக் கொல்லப்பட்டமை மற்றும் யுத்தத்தின் பின்னர் ஆயிரக்கணக்கான தமிழர்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்த புனர்வாழ்வு நிலையங்களுக்குள் பரவலாக நிகழ்ந்த மீறல்கள் என்பன பற்றிய விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அவ்வறிக்கையில் தயா ரத்நாயக்க இராணுவத்தில் பணியாற்றிய காலப்பகுதியில் பொதுமக்கள் மீதான சட்டவிரோதப் படுகொலைகள், வலுகட்டாயமாகத் தடுப்புக்காவலில் வைத்தல், சித்திரவதைகளுக்கு உட்படுத்தல், வலிந்து காணாமலாக்குதல் என்பன உள்ளிட்ட மிகமோசமான மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக 2006 மற்றும் 2007 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட பாரிய இராணுவ நடவடிக்கைகளின்போது பீரங்கிகள், வான்வழித்தாக்குதல் உபகரணங்கள் மற்றும் நவீன ஆயுதங்களைப் பயன்படுத்தி பொதுமக்கள்மீது தாக்குதல்கள் நடாத்தப்பட்டதாகவும், அக்காலப்பகுதியில் பொதுமக்கள் இடம்பெயர்ந்து தஞ்சம் புகுந்திருந்த வாகரையில் உள்ள பாடசாலை ஒன்றின்மீது நடாத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடமுடியும் எனவும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி அக்காலப்பகுதியில் 23 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாகப் பணியாற்றிய தயா ரத்நாயக்க, இந்த மீறல்களில் முக்கிய பங்கு வகித்ததாக விபரிக்கப்பட்டுள்ளார்.

அதேபோன்று யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் அரசாங்கத்தினால் புனர்வாழ்வு நிலையங்கள் என அழைக்கப்பட்ட கட்டமைப்புக்களுக்குள் அடித்துத் துன்புறுத்துதல், நீருக்குள் மூழ்கடித்தல், மூச்சுத்திணச்செய்தல், பாலியல் வன்புணர்வு மற்றும் உளவியல் சித்திரவதைகள் என்பன உள்ளிட்ட பரவலான சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகள் இடம்பெற்றதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.