பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவையில் முதியோர் நல வைத்திய நிபுணராகப் பணியாற்றி, புற்றுநோயால் உயிரிழந்த இலங்கை வைத்தியர் வாசீஹரனின் குடும்பத்தினர், தற்போது நாட்டை விட்டு வெளியேறும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு தனது மனைவி பிரபோத்யா விஜேதுங்க மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் பிரித்தானியாவிற்கு இடம்பெயர்ந்த வைத்தியர் வாசீஹரன், அங்குள்ள பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வந்தார். எனினும், கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், அண்மையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
வைத்தியர் வாசீஹரனின் விசாவிலேயே அவரது குடும்பத்தினரும் பிரித்தானியாவில் தங்கியிருந்தனர். அவரது மரணத்தைத் தொடர்ந்து, அவர்களது வதிவிட உரிமை கேள்விக்குறியாகியுள்ளது.
மனிதாபிமான அடிப்படையில் அங்கு தங்குவதற்கு அவரது மனைவி பிரபோத்யா விடுத்த இரண்டு விண்ணப்பங்களும் பிரித்தானிய அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டுள்ளன.
குடியுரிமை அந்தஸ்து இல்லாத காரணத்தால் பிரபோத்யாவால் அங்கு வேலை செய்ய முடியாமல் போயுள்ளதுடன், கடந்த ஒரு வருடமாகப் பாரிய நிதி நெருக்கடியையும் அவர் சந்தித்து வருகின்றார்.
இந்தக் குடும்பத்திற்கு இழைக்கப்படும் அநீதி குறித்து பிரித்தானிய மருத்துவச் சங்கம் தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
“தனது வாழ்நாளை மற்றவர்களின் உயிரைக் காக்க அர்ப்பணித்த ஒரு வைத்தியரின் குடும்பத்தை இவ்வளவு தூரம் அலைக்கழிப்பது முறையல்ல” என பிரிட்டிஷ் வைத்திய சங்கத்தின் தலைவர் டொம் டொல்பின் தெரிவித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்றின் போது உயிரிழந்த சுகாதாரப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட விசேட தங்குமிட அனுமதி போன்ற நடைமுறைகள், இவ்வாறான சந்தர்ப்பங்களிலும் பின்பற்றப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
தனது பிள்ளைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு பிரித்தானியாவிலேயே தங்கியிருக்க விரும்புவதாகப் பிரபோத்யா தெரிவித்துள்ளார். அத்துடன், தமது இனங்களுக்கு இடையிலான திருமணம் காரணமாக இலங்கைக்குத் திரும்பினால் சமூக மற்றும் கலாசார ரீதியான சவால்களை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
சர்வதேச அளவில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், புலம்பெயர்ந்து பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்களின் குடும்பப் பாதுகாப்பு குறித்த புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது.



