நெருக்கடி நிலைமைகளின்போது தற்போதுள்ள ஆட்சியாளர்கள் எதிர்க்கட்சியில் இருக்கும்போது அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளிவிட செயற்பட்டபோது, தற்போதுள்ள எதிர்க்கட்சிகள் அவ்வாறு செயற்படாமல் அரசாங்கத்துக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகின்றன. அது தொடர்பில் மகிழ்ச்சியடைகிறோம் என முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்போதைய யுத்த நிலைமை காரணமாக நாட்டில் எரிபொருள் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. என்றாலும் இதனையும்விட எரிபொருள் நெருக்கடி நிலைமை 2022 ஏப்ரல், மே மாதங்களில் ஏற்பட்டது. அப்போது இருந்த அரசாங்கத்துக்கு, நாட்டை நிர்வகிக்க முடியாமல் இருந்தபோது நாட்டை பொறுப்பேற்க யாரும் முன்வராத நிலையில், நாங்கள் நாட்டை பொறுப்பேற்று, ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்துகொண்டு நாங்கள் அந்த பிரச்சினையை குறுகிய காலத்தில் தீர்த்தோம்.
என்றாலும் அன்றிருந்த நெருக்கடி நிலைக்கும் இன்றுள்ள நிலைமைக்கும் உள்ள வித்தியாவசம் என்னவென்றால், அன்று நெருக்கடி நிலைமையை பயன்படுத்திக்கொண்டு, சந்தர்ப்பவாத அரசியல் குழுகள் முழுநாட்டிலும் தீமூட்டி, வீடுகளை எரித்து கொள்ளையடித்தன. இன்று இந்த அரசாங்கத்துக்கு கீழ் நெருக்கடி நிலைமை ஏற்பட்டிருக்கும்போது யாரும் தீ மூட்ட வரவில்லை. பாராளுமன்றத்துக்கு தீ வைப்பதற்கு யாரும் வருவதில்லை. மாறாக நாட்டு மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடாமல், அரசாங்கத்துக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகின்றன, அது தொடர்பில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
அத்துடன் தற்போதைய அசாதாரண நிலைமை சுமுக நிலைக்கு வருவதற்கு என்னும் எவ்வளவு காலம் செல்லும் என தெரியாது. என்றாலும் அமெரிக்காவும் ஈரானும் விரைவாக ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்தால், குறுகிய காலத்தில் இந்த பிரச்சினை தீர்வதற்கு இடமிருக்கிறது.
தற்போதுள்ள நெருக்கடி நிலையில் அரசாங்கம் மக்களுக்கு முடியுமான நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறான நெருக்கடி நிலையில் நாங்கள் ஆட்சி செய்யும்போது, தற்போதுள்ள அரசாங்கம், மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அழுத்தம் கொடுத்து வந்தது. துறைமுகத்தில் இறக்கப்படும் எரிபொருளுக்கான வருமானத்தை குறைத்து மக்களுக்கு நிராணம் வழங்குவதாகவே அவர்கள் மக்களுக்கு வாக்குறுதியளித்தார்கள். அவர்களின் வாக்குறுதியின் அடிப்படையிலே மக்கள் அவர்களுக்கு வாக்களித்தார்கள்.
அன்று எரிபொருளுக்கான வரி யாருடையயாவது பொக்கெட்டுக்கு சென்றிருந்தால், இன்று எரிபொருள் விலை குறைவடையாவிட்டால், அந்த பணம் இன்றும் யாருடையயாவது பொக்கெட்டுக்கு செல்ல வேண்டும் அல்லவா? இல்லாவிட்டால் எரிபொருள் விலை குறைவடைய வேண்டும் என்றார்.





