மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகள் உலகளாவிய ரீதியில் கவலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்த 10 நாட்களுக்கு தாக்குதல் நடத்தப்படமாட்டாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த போர் நிலையை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில், பாகிஸ்தான் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் அமைதி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமைதி முயற்சிகளின் ஒரு பகுதியாக, அமெரிக்கா 15 அம்சங்களைக் கொண்ட திட்டத்தை முன்வைத்துள்ளது. இதில் ஈரானுக்கு விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை நீக்குதல், அணுசக்தி திட்டங்களை கைவிடுதல், ஏவுகணை நடவடிக்கைகளில் கட்டுப்பாடுகள் விதித்தல், ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறத்தல் மற்றும் ஆயுதக் குழுக்களுக்கு வழங்கப்படும் ஆதரவை நிறுத்துதல் போன்ற முக்கிய அம்சங்கள் அடங்குகின்றன.
எனினும், அமெரிக்காவின் இந்த திட்டத்தையும், நேரடி அமைதி பேச்சுவார்த்தை நடைபெறுகின்றன என்ற தகவலையும் ஈரான் மறுத்துள்ளது. அதேவேளை, மறைமுக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில், தனது சமூக வலைத்தள பதிவில், ஏப்ரல் 6 ஆம் திகதி வரை ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படமாட்டாது என டிரம்ப் அறிவித்துள்ளார். இது ஈரானின் கோரிக்கையை ஏற்று மேற்கொள்ளப்பட்ட இடைக்கால போர்நிறுத்த நடவடிக்கையாகவும், பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு வழங்கும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.




