அரியலூரில் அமைச்சர் சிவசங்கர் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

அரியலூரில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சென்ற காரை வழி மறித்த தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டார்.

அரியலூர் மாவட்டத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையத்தின் சார்பில் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் என இரு தொகுதிகளுக்கு தலா 9 கண்காணிப்பு குழுக்களும், 9 பறக்கும் படையும் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் 3 வேளையும் வாக்காளர்களுக்கு ஏதேனும் பணம் பட்டுவாடா செய்ய சட்ட விரோதமாக பணம் கொண்டு செல்லப்படுகிறதா, தேர்தல் விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பது குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அரியலூரில் இருந்து திருமானூர் செல்லும் சாலையில் அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் இன்று தனது காரில் சென்றார். அப்போது, கீழப்பழுவூர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படை அலுவலர் நிர்மல்ராஜ் தலைமையிலான குழுவினர், அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் காரை மறித்து சோதனையில் ஈடுபட்டனர்.

பறக்கும் படையினரின் சோதனைக்கு அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார். மேலும், சோதனையில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் எதுவும் இல்லாததால், அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கார் செல்ல தேர்தல் பறக்கும் படையினர் அனுமதித்தனர். இதையடுத்து அமைச்சர் அங்கிருந்து சிவசங்கர் புறப்பட்டுச் சென்றார்.