“விஜய் மனதில் பாஜக; அதனால்தான் எங்கள் வேட்பாளர் பெயரை கூறினார்” – குஷ்பு

விஜய் மனதில் பாஜக உள்ளதால்தான் புதுச்சேரியில் அவரது வேட்பாளருக்கு பதில் பாஜக வேட்பாளர் பெயரை கூறினார். ராகுல் ஒருகாலத்திலும் பிரதமராக முடியாது என பாஜக துணைத் தலைவர் குஷ்பு தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக துணைத் தலைவர் குஷ்பு புதுவையில் தொண்டமாநத்தம் முதல் பத்துக்கண்ணு சந்திப்பு வரை ரோடு ஷோ நடத்தி, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் இன்று ஈடுபட்டார்.

இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஊழல் ஆட்சி நடக்கிறது. 8,9-ம் வகுப்பு குழந்தைகளிடம் சாராயம், போதைப் பொருட்கள் கிடைக்கிறது. ஆனால் புதுவையில் முன்னேற்றமான ஆட்சி நடக்கிறது. புதுவையில் ரெஸ்டோபார்களுக்கு கட்டுப்பாடுகள் உள்ளது. ஆனால் தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் மது அருந்திவிட்டு வகுப்பறைகளில் வந்து தகராறில் ஈடுபடுகின்றனர்.

புதுவை ரெஸ்டோபார்களுக்கும், தமிழக சாராயத்துக்கும் வித்தியாசம் உள்ளது. மக்களை ஏமாற்றி, பொய் வாக்குறுதியை அளித்து 5 ஆண்டு திமுக ஆட்சி நடத்தியது. டீசல் விலைக்கு மத்திய அரசு வரி சலுகை அளித்துள்ளது. ஆனால் அதைப்பற்றி பேச தமிழக அரசுக்கு வக்கில்லை. புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்குவதாக பொய்யான வாக்குறுதி அளிக்க முடியாது. புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்குவது மிகப்பெரிய நடவடிக்கை. இதுகுறித்து பல மாநிலங்களுடன் பேச வேண்டியுள்ளது. தேவையான விஷயத்தை பாஜக சரியான காலத்தில் செய்யும்.

மல்லிகார்ஜூன கார்கே தனது நாற்காலியை காப்பாற்ற பிரதமராகவோ, குடியரசுத் தலைவராகவோ ராகுல் ஆவார் எனச் சொல்வார். ராகுல் பிரதமராவது கனவு. அவர்கள் கனவு காண்பதற்கு உரிமை உண்டு. ஆனால் அவரால் ஒருபோதும் பிரதமர் ஆக முடியாது. புதுவை மதுவை மட்டும் நம்பி இல்லை. புதுவை சுற்றுலா நகரம். இங்கு அளவோடு மது உள்ளது. ஆனால் தமிழகத்தில் மது விற்பனையை மட்டுமே நம்பி அரசு செயல்படுகிறது.