கொஹுவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுபோவில பகுதியில் உள்ள வீடமைப்புத் தொகுதி ஒன்றில், வெளிநாட்டு பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் 23ஆம் திகதி இடம்பெற்ற இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் கொஹுவலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். இந்நிலையில், மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) கொள்ளுப்பிட்டி ஸ்ரீமத் அனகாரிக தர்மபால மாவத்தையில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று திங்கட்கிழமை (06) நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதுடன், கொஹுவலை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.





