பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படமாட்டாது

பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படமாட்டாது. லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளது. மஞ்சள் நிற சிலிண்டர் தடையின்றி சந்தைக்கு விநியோகிக்கப்பட  வேண்டும். அவ்வாறு இல்லாவிடின்  வழக்குத் தாக்கல் செய்யப்படும் என நுகர்வோர் அதிகாரசபை மஞ்சள் நிற எரிவாயு சிலிண்டர் நிறுவனத்துக்கு அறிவுறுத்தியுள்ளது என வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும்  கூட்டுறவு  அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று  செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விளையாட்டில் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மற்றும் இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

மத்திய கிழக்கு நாடுகளில் தோற்றம் பெற்றுள்ள மோதல் நிலைமைகளினால் தேசிய மட்டத்தில் எரிபொருள் உட்பட அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.ஆனால் எதிர்க்கட்சிகள் தான் அதனை அறியவில்லை.

மத்திய கிழக்கில் மோதல் நிலைமை  தொடங்கியவுடன்  அத்தியாவசிய உணவு பொருட்கள் உற்பத்தியாளர்களுடன்  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். கோதுமை மா உட்பட இனிப்பு உணவுப்   பொருட்களின் விலைகளை அதிகரிக்கப் போவதில்லை என்று உற்பத்தியாளர்கள் உறுதியளித்துள்ளார்கள்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் தங்களுடன்  பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர்  குறிப்பிடுகிறார்.  எதிர்க்கட்சிகளை சந்திக்குமாறு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளிடம் அரசாங்கத்தால் குறிப்பிட முடியாது. எதிர்க்கட்சிகள் செயற்படும் விதத்தை  அடிப்படையாகக் கொண்டு தான் நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் சந்திப்புக்கள் குறித்து தீர்மானிப்பார்கள்.

பண்டிகை காலத்தை முன்னிட்டு சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நுகர்வோர் அதிகார சபை  தொடர் சுற்றிவளைப்புக்களை முன்னெடுக்கும். அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை  அதிகரிக்காமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளது. மஞ்சள் நிற சிலிண்டர் தடையின்றி சந்தைக்கு விநியோகிக்கப்பட  வேண்டும் .அவ்வாறு இல்லாவிடின்  வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்று நுகர்வோர் அதிகாரசபை மஞ்சள் நிற எரிவாயு சிலிண்டர் நிறுவனத்துக்கு அறிவுறுத்தியுள்ளது.

மஞ்சள் நிற சிலிண்டரை விநியோகிக்கும் நிறுவனம் சந்தைக்கு தடையின்றி  தமது உற்பத்திகளை வழங்க வேண்டும்.இல்லையேல் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.