அமெரிக்க துணை ஜனாதிபதி பாகிஸ்தான் பிரதமரை சந்தித்தார்

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை  சனிக்கிழமை (11) சந்தித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அண்மைக் காலங்களாக நிலவி வரும் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, ஈரானியக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் பிரதமர் அமெரிக்க துணை ஜனாதிபதியை சந்தித்தார்.

ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கான இரு தரப்பு பிரதிநிதிகளின் உறுதிப்பாட்டைப் பாராட்டிய பாகிஸ்தான் பிரதமர்  இந்தப் பேச்சுவார்த்தைகள் பிராந்தியத்தில் நிலையான அமைதியை நோக்கிய ஒரு படிக்கல்லாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

பிராந்தியத்தில் நீடித்த அமைதியை நோக்கிய முன்னேற்றத்தை அடைவதற்கு, இரு தரப்பினருக்கும் பாகிஸ்தான் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் என்பதை பாகிஸ்தான் பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

அத்துடன், முன்னதாக பாகிஸ்தான் வருகை தந்த ஈரானியக் குழுவினரையும் பிரதமர் சந்தித்துப் பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.