மின்சார பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர வேண்டுகோள்

உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மற்றும் உள்நாட்டுத் தேவைகளைக் கருத்திற் கொண்டு, எதிர்வரும் புத்தாண்டுப் பண்டிகைக் காலத்தில் மின்சாரத்தைப் பொறுப்புடன் பயன்படுத்துமாறு இலங்கை நிலையான ஆற்றல் அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் டி.எம்.டபிள்யூ.ஜே. பண்டாரா பொதுமக்களிடம் விசேட வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் ஊடகங்களிடம் மேலும் தெரிவித்துள்ளதாவது,”மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது இலங்கை போன்ற நாடுகளுக்குப் புதைபடிவ எரிபொருட்களைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சவால்களை உருவாக்கியுள்ளது.

எனவே, கிடைக்கக்கூடிய வளங்களை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டியது ஒவ்வொரு பிரஜையினதும் கடமையாகும். இரவு 6:00 மணி முதல் 10:00 மணி வரையான காலப்பகுதியில் மின்சாரத் தேவை மிக அதிகமாகக் காணப்படுகின்றது.

எனவே, இக்காலப்பகுதியில் தேவையற்ற மின் விளக்குகள் மற்றும் மின் சாதனங்களின் பயன்பாட்டைக் குறைப்பது அவசியமாகும்.

விடுமுறை நாட்களில் தொழிற்சாலைகள் மூடப்பட்டிருப்பதாலும், பகல் வேளையில் சூரிய சக்தி அதிகளவு கிடைப்பதாலும், சமையல் மற்றும் துணி துவைத்தல் போன்ற மின்சாரத்தை அதிகம் கோரும் பணிகளைப் பகல் நேரத்திலேயே முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நடைமுறை ஆலோசனைகள்

தொலைக்காட்சி, இணைய ரௌட்டர்கள் மற்றும் ரைஸ் குக்கர் போன்ற சாதனங்களைப் பயன்படுத்தாத போது அவற்றின் சுவிட்சுகளை முழுமையாக அணைத்துவிட வேண்டும்.

மின்சார பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர வேண்டுகோள் | Urgent Appeal To Electricity Consumers

 

* அலுவலகங்களை மூடிச் செல்லும் போது அனைத்து மின் சாதனங்களும் துண்டிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துவது அவசியம்.

* புத்தாண்டுக்காகப் புதிய மின் சாதனங்களை வாங்கும் போது, மின் திறன் மிக்க சாதனங்களையே தேர்ந்தெடுக்க வேண்டும்.

மின்சார அதிகார சபையினால் வழங்கப்படும் நான்கு அல்லது ஐந்து நட்சத்திரக் குறியீடு கொண்ட சாதனங்களைப் பயன்படுத்துவதன் மூலம், நீண்ட கால அடிப்படையில் மின்சாரக் கட்டணத்தைப் பெருமளவு குறைக்க முடியும். இது தனிநபர்களுக்கு மாத்திரமன்றி நாட்டுக்கும் பெரும் நன்மையளிக்கும்.” என்றும் தெரிவித்துள்ளார்.