தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர் – சாணக்கியன் குற்றச்சாட்டு!

தமிழ் மக்கள் ஒரே குடையின் கீழ் ஒன்றுபடவேண்டும் என்ற நோக்கில் செயற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், சில புல்லுருவிகள் தங்களது சுயநல அரசியல் சுகபோகத்திற்காக அந்த முயற்சிகளைத் தடுக்கின்றனர் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

அவர் இந்தக் கருத்தை துறை நீலாவணையில் நடைபெற்ற யுனைட்டெட் விளையாட்டுக் கழகத்தின் சித்திரை விளையாட்டுப் போட்டியில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில்,

தமிழ் மக்களின் அரசியல் தீர்வினைப் பெற வேண்டுமெனில் அனைத்து தமிழ் தேசியக் கட்சிகளும் ஓரணியில் இணைந்து, ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்.

இதற்காக பல அமைப்புகள் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வரும் நிலையில், சில அரசியல்வாதிகள் தங்களது சுயநல அரசியல் நோக்கங்களுக்காக அந்த முயற்சிகளைத் தடுக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர் என்றார்.

மேலும், நடிகர் விஜய் நடித்துள்ள “ஜனநாயகன்” திரைப்படம் தொடர்பாகவும் அவர் குறிப்பிட்டார்.

அந்த திரைப்படத்தின் சில காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாகவும், அதில் காட்டப்படுவது போல சில அரசியல்வாதிகள் தங்களது அரசியல் நோக்கங்களுக்காக மக்களிடையே பிரிவினைவாதத்தை விதைத்து, அதன் மூலம் தாங்களே பலனடைந்து வருகின்றனர் என்று கூறினார்.

இந்த நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மே.வினோராஜ் உள்ளிட்ட கிராம பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.