“தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது. சட்டம் ஒழுங்கை நினைவில் வைத்துக்கொண்டு வாக்களியுங்கள்,” என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசினார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பரமசிவத்தை ஆதரித்து வெள்ளிக்கிழமை (ஏப்.17) காலை பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வேடசந்தூர் ஆத்துமேடு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது: அமலாக்கத் துறையை முதன்முதலாக வேடசந்தூருக்கு அழைத்துவந்து இரண்டு நாட்கள் ரெய்டு நடத்திய பெருமை திமுக வேட்பாளருக்கு சேரும். பொங்கல் தொகுப்பில் ஒழுகும் வெள்ளம் கொடுத்தவர்கள் திமுகவினர். என்டிஏ கூட்டணி ஆட்சிக்கு வந்தால், வேடசந்தூர், வடமதுரை பகுதிகளுக்கு காவிரி நீரை கொண்டுவந்து குளங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
வேடசந்தூர் தொகுதியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த நீங்கள் பரமசிவத்தை ஆதரிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் சரித்திரமிக்க மசோதாவை கொண்டுவந்துள்ளனர். 33 சதவீத மகளிருக்கு இடஒதுக்கீடு மசோதா மகளிருக்கு உதவி செய்யும்.
முதல்வர் ஸ்டாலின் பொய்பேசி வருகிறார். தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் குறைந்துவிடும் என்கிறார். ஆனால், தமிழ்நாட்டில் மக்களவை தொகுதி இடங்கள் 39 ல் இருந்து 59 என உயர்த்தியுள்ளனர். எல்லா மாநிலங்களுக்கும் 50 சதவீத உயர்வு இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மகளிரை நாடாளுமன்றத்துக்கு அழைத்துச் செல்ல மகளிர் இட ஒதுக்கீட்டை பிரதமர் கொண்டு வந்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டம் – ஒழுங்கு கெட்டுவிட்டது. பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது. சட்டம் – ஒழுங்கை நினைவில் வைத்து வாக்களியுங்கள்.
குடகனாற்றில் வரும் நீரை ஒரு மந்திரி திருப்பி கொண்டு போய்விட்டார். ஆற்றுக்கு தண்ணீர் வரும் வழியில் தடுப்புசுவர் கட்டி தண்ணீரை திருப்பிவிட்டனர். குடும்ப ஆட்சி இல்லாத மாவட்டமாக திண்டுக்கல்லை நீங்கள் மாற்ற வேண்டும்.
முதல்வர் ஒரு பொம்மை, கீ கொடுத்தால் காலையில் டெல்லி, மதியம் இந்தி, மாலையில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது என்பார்.
வேடசந்தூர் தொகுதிக்கு திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவற்றவில்லை. பெரிய மாற்றத்தை ஏற்படுத்த அதிமுகவை ஆதரிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் டிஜிபி, தலைமைச் செயலாளரை மாற்றியுள்ளது. அதேபோல் நீங்கள் முதல்வரை மாற்றிவிடுங்கள்.
திமுக வேட்பாளர் சாமிநாதன் எப்பொழுது வேண்டுமானாலும் கைது செய்யப்படுவார் என்பதை மறந்துவிடாதீர்கள். இப்படித்தான் கரூர் சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருந்தார். அதனால் அதிமுக வேட்பாளரை ஆதரியுங்கள்”. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
பிரச்சாரத்தின்போது, திண்டுக்கல் தொகுதி வேட்பாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன், பாஜக மேற்கு மாவட்ட தலைவர் ஜெயராமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.



