நைஜீரியாவில் கிராமங்களுக்குள் புகுந்து பொதுமக்கள் மீது பயங்கரவாதிகள் பாரிய தாக்குதல் ; 20க்கு மேற்பட்டோர் பலி

நைஜீரியாவில் பயங்கரவாதிகள் சிலர் இரண்டு கிராமங்களில் நடத்திய தாக்குதல்களில் 20க்கு மேற்பட்டோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

போர்னே மாகாணத்தில் சம்பீசா வனப் பகுதியில் புபாகு மற்றும் மாயோ லாடே ஆகிய கிராமங்களில் செவ்வாய்க்கிழமை (21) தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்களில் சிலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இஸ்லாமிய பயங்கரவாதிகள் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

போகோ ஹராம் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சிலர் துப்பாக்கி முதலான ஆயுதங்களுடன் கிராமத்துக்குள் புகுந்து, மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கிராமவாசிகள் கூறுகின்றனர்.

தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்த கிராமங்களில் உள்ள பல வீடுகளுக்கு தீ வைத்ததாகவும் கூறப்படுகிறது.

நைஜீரியாவில் இயங்கி வரும் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய லகுரவா அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் கொள்ளை, மிரட்டல், மோசடி, சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் கும்பல்கள் அந்நாட்டில் பல இடங்களில் வன்முறைத் தாக்குதல்களில் ஈடுபட்டு வருவது அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.