வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்யும் இரகசிய இராணுவ நடவடிக்கையை வைத்து, பந்தயத்தில் ஈடுபட்டு 4,00,000 டொலர் இலாபம் ஈட்டிய அமெரிக்கச் விசேட படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க இராணுவத்தின் ‘ஃபோர்ட் பிராக்’ தளத்தில் பணியாற்றும் மாஸ்டர் சார்ஜென்ட் கேனன் கென் வான் டைக் என்பவர் மீது இந்தத் திருட்டு மற்றும் மோசடி முறைப்பாடு சுமத்தப்பட்டுள்ளது.
வெனிசுவேலா ஜனாதிபதியை இரகசியமாகத் தூக்கி வரும் ‘ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்’ திட்டத்தில் வான் டைக் ஒரு முக்கிய அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார்.
இந்தத் திட்டம் எப்போது நடக்கும் என்பது இவருக்கு முன்னரே தெரிந்திருந்தது. இதைப் பயன்படுத்தி, பாலிமார்க்கெட் என்ற இணையதளத்தில், “ஜனவரி மாதத்திற்குள் மதுரோ பதவியிலிருந்து நீக்கப்படுவார்” என 32,000 டொலர்களைப் பந்தயமாகக் கட்டினார்.
ஜனவரி மாதம் திட்டமிட்டபடி மதுரோ கைது செய்யப்பட்டார். இதனால் வான் டைக் கட்டிய பந்தயத்திற்கு 4,00,000 டொலர் பரிசு கிடைத்தது.
அனாமதேயமாக பந்தயத்தில் ஈடுபட்டாலும், இவ்வளவு பெரிய தொகையை ஒருவர் வென்றது சட்ட துறையினரின் கவனத்தை ஈர்த்தது. விசாரணையில், வான் டைக் தனது இலாபத்தை ஒரு வெளிநாட்டு கிரிப்டோகரன்சி கணக்கிற்கு மாற்றி, அங்கிருந்து தனது வங்கிக் கணக்கிற்குத் திசைதிருப்பியது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், மதுரோ கைது செய்யப்பட்ட சில மணித்தியாலங்களுக்கு பின்னர், வான் டைக் சீருடையில் ஆயுதங்களுடன் கப்பல் ஒன்றில் இருக்கும் புகைப்படம் ஆதாரமாகச் சிக்கியுள்ளது.
“நாட்டின் இரகசியங்களைப் பாதுகாக்க வேண்டியவர்கள், அதைத் தனது சுய இலாபத்திற்காகப் பயன்படுத்தியது மன்னிக்க முடியாத குற்றம்” என நியூயார்க் வழக்கறிஞர் ஜே கிளேட்டன் தெரிவித்துள்ளார். வான் டைக் மீது அரசு இரகசியங்களைத் திருடியது, முறையற்ற முறையில் பயன்படுத்தியது மற்றும் மோசடி உள்ளிட்ட 05 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், அமெரிக்கப் படைகளால் காரகாஸிலிருந்து கடத்தி வரப்பட்ட வெனிசுவேலா ஜனாதிபதி மதுரோ, தற்போது நியூயோர்க் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தன் மீதான போதைப்பொருள் கடத்தல் முறைப்பாடுகளை தான் நிரபராதி என வாதிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.



