யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனைத்து வகைக் குருதிக்கும் மீண்டும் தட்டுப்பாடு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் தற்போது அனைத்து வகைக் குருதிக்கும் மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்தவங்கிப் பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஒவ்வொரு மாதமும் எத்தனை பைந்த் குருதி தேவை? என்பதைப் பொறுத்து அதற்கு ஏற்ப நாம் இரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்தும், இரத்தவங்கிக்கு நேரடியாகக் குருதிக் கொடையாளர்களை அழைத்தும் தேவையான குருதியைச் சேகரித்து சேமித்து நோயாளர்களுக்கு அவ்வப்போது விநியோகிக்கும் நடைமுறையே காணப்படுகின்றது.

திட்டமிடப்பட்ட குருதிக் கொடை முகாம்கள் நடைபெறாமல் ரத்துச் செய்யப்படல், குருதிக் கொடை முகாம்களில் எதிர்பார்க்கப்பட்ட குருதிக்கொடையாளர்களின் எண்ணிக்கை குறைவடைவதல், எதிர்பார்த்ததை விடத் திடீரெனக் குருதி விநியோகம் அதிகரித்தல் போன்ற காரணங்களால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அடிக்கடி குருதிக்குத் தட்டுப்பாடு ஏற்படுகின்றது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்தவங்கியில் இம் மாதம் 04 குருதிக் கொடை முகாம்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.  இதனாலேயே, எமது இரத்த வங்கியில் அடிக்கடி குருதிக்குத் தட்டுப்பாடு ஏற்படுகின்றது. எனவே, இளைஞர்கள் மற்றும் யுவதிகள் குருதிக் கொடை வழங்க முன் வர வேண்டும்.  மேலதிக விபரங்களுக்கு 0772105375 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் எனவும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை இரத்தவங்கிப் பிரிவினர் குறிப்பிட்டனர்.