“தொடர்ந்து இரண்டாண்டுகளாக இரட்டை இலக்க வளர்ச்சி என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளோம். தெற்காசியாவில் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு உயர வேண்டும்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு தொடர்ச்சியாக 2-வது நிதியாண்டிலும் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 2024-25 நிதியாண்டில் 11.19% வளர்ச்சியைக் கண்ட நிலையில், 2025-26 நிதியாண்டில் 10.83% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக ஒன்றிய புள்ளியியல் துறை சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “தமிழ்நாடு என்றாலே சாதனை! சாதனை! சாதனை. திராவிட மாடல் தனித்துவமான மாடல். சொன்னதை, எண்களிலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம். முதல் மூன்றாண்டுகளில் அடித்தளம் அமைத்து, இப்போது தொடர்ந்து இரண்டாண்டுகளாக இரட்டை இலக்க வளர்ச்சி என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளோம்.
சிறப்பான நமது நிர்வாகத்திற்கு, உழைப்பால் துணை நின்ற தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி. இது தொடக்கம்தான். உங்கள் துணையோடு இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி. நம்முடைய போட்டி என்பது மற்ற இந்திய மாநிலங்களுடன் அல்ல; தெற்காசியாவில் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு உயர வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.





