ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட வர்த்தகருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்!

பத்தாயிரம் ரூபாய் தருவதாக கூறி  ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட வர்த்தகர் ஒருவருக்கு கல்முனை நீதிவான் நீதிமன்றம் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

அம்பாறை – கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வர்த்தக நிலையம் ஒன்றில் நீண்ட காலமாக குறித்த ஓரினச்சேர்க்கை  செயற்பாடு இடம்பெற்று வந்துள்ளது.

இதனை அறிந்த 17 வயது மதிக்கத்தக்க இரு சிறுவர்கள் குறித்த வர்த்தக நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

இதன்போது அங்கு சென்ற இரு சிறுவர்களையும் வரவேற்ற குறித்த வர்த்தகர்  ஓரினச்சேர்க்கை  செயற்பாட்டிற்காக ரூபா பத்தாயிரம் தருவதாக பேரம் பேசியுள்ளார்.

பின்னர் சிறுவர்களில் ஒருவரை அச்செயற்பாட்டியில் ஈடுபடுத்தியுள்ளார். இதன்போது மற்றுமொரு சிறுவன்  ஓரினச்சேர்க்கையில்  ஈடுபட்ட காணொளியினை வர்த்தகரின் கைத்தொலைபேசியில் பதிவு செய்துள்ளார்.

பின்னர், ஏற்கனவே பேரம் பேசிய ரூபா பத்தாயிரம் கிடைக்கப்பெறாமையினால் ஓரினச்சேர்க்கையில்  ஈடுபட்ட காணொளியினை பதிந்த வர்த்தகரின் கைத்தொலைபேசியினை இரு சிறுவர்களும் எடுத்துச்சென்றுள்ளனர்.

அதுமாத்திரமின்றி அச்சிறுவர்கள்  குறித்த செயற்பாட்டிற்கு பேரம் பேசிய பணத்தை   தருமாறு கோரி மிரட்டி அச்சுறுத்தியதுடன், தரவேண்டிய தொகை கிடைக்கப்பெறாத பட்சத்தில் சமூக  ஊடகங்களில்  பிரசுரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதனை அடுத்து சுதாகரித்த குறித்த 56 வயது திருமணமான வர்த்தகர் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு உடனடியாக கடந்த 06ஆம் திகதி சென்று முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்திருந்தார்.

குறித்த முறைப்பாட்டில் தனது வர்த்தக நிலையத்திற்கு வருகை தந்த 17 வயது மதிக்கத்தக்க  இரு சிறுவர்கள் மேசையில் இருந்த விலையுயர்ந்த கைத்தொலைபேசியினை திருடிச் சென்றிருப்பதாக அம்முறைப்பாட்டில் குறிப்பிட்டிருந்தார்.

வர்த்தகரின் குறித்த முறைப்பாட்டிற்கமைய  பொலிஸார் புலன் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். இதன்போது  அம்பாறை –  புறநகர் பகுதியில் வைத்து  17 வயது மதிக்கத்தக்க இரு சிறுவர்களையும்  கைது செய்து கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

இதன்போது பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் விடயங்கள் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து  21ஆம் திகதி  குறித்த வழக்கு கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில்  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது  குறித்த காணொளியை இரு சிறுவர்கள் சார்பாக ஆஜரான எதிர்தரப்பு சட்டத்தரணிகள்  நீதிமன்றிற்கு சமர்ப்பித்த நிலையில்  வழக்கின் சான்றுப்பொருளாக எடுத்துக்கொள்ளுமாறு உத்தரவிட்ட  நீதிவான் கைதான  இரு சிறுவர்களில் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரை  சட்ட வைத்திய அதிகாரியிடம் வைத்திய பரிசோதனைக்கு  அனுப்பி   வைக்குமாறும்  பிரதான சந்தேகநபரான வர்த்தகரை கைது செய்யுமாறு  உத்தரவு பிறப்பித்ததுடன் குறித்த வழக்கினை ஒத்தி  வைத்திருந்தார்.

இதன்போது பிரதான சந்தேகநபரான வர்த்தகர் தலைமறைவாகி இருந்ததுடன் குறித்த வழக்கும் நேற்று திங்கட்கிழமை (25) விசாரணைக்காக மறுதவணை இடப்பட்டிருந்தது.

அத்துடன் குறித்த வழக்கானது  மன்றில்  விசாரணைக்கு  நேற்று  கல்முனை நீதிமன்ற  நீதிவான் கே.எல்.எம்.சாஜித் முன்னிலையில்   எடுத்திருந்த போது 04 நாட்கள் தலைமறைவாகி இருந்த வர்த்தகர் 05 சட்டத்தரணிகளுடன் மன்றில் சரணடைந்திருந்தார்.

இதன்போது சந்தேக நபரான வர்த்தகர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து  கைது செய்யப்பட்ட நிலையில் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு சட்ட நடவடிக்கைக்காக  வாக்கு மூலம்  சந்தேகநபரிடம் பதியப்பட்டு பின்னர் மீண்டும்  மன்றிற்கு அழைத்து வரப்பட்டு   மன்றில்  விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சந்தேகநபரான வர்த்தகருக்கு எதிர்வரும் ஜுன் மாதம் 08 ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்ற  நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.

மேலும்  இவ்விடயம் குறித்து   கிழக்குப் பிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி  வருண ஜெயசுந்தரவின் உத்தரவின் பேரில் அம்பாறை பிரிவுக்குப் பொறுப்பான  பிரதி பொலிஸ் மா அதிபர்  சுஜித் வேதமுல்லவின் பணிப்புரைக்கமைய  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரியாராச்சி நெறிப்படுத்தலில் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அசார்   வழிகாட்டுதலின் கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரி  லசந்த களுவாராய்ச்சி தலைமையிலான பல்வேறு  குற்றத்தடுப்பு பிரிவு  பொறுப்பதிகாரி    உப  பொலிஸ் பரிசோதகர்  கே.எல்.எம் முஸ்தபா   மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.