ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் கும்பலின் முக்கிய சந்தேகநபர்களான ‘புளூமெண்டல் சங்கா’ மற்றும் ‘மோதர நிபுன்’ ஆகியோர் அபுதாபியிலிருந்து நாடுகடத்தப்பட்ட நிலையில், நேற்று சனிக்கிழமை (13) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்துப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டுவிட்டு தப்பிச்சென்று அபுதாபியில் தலைமறைவாகியிருந்த நிலையிலேயே இவ்விருவரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
மத்திய கிழக்கில் தற்சமயம் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலைகளுக்கு மத்தியில், ஈரானினால் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் வான்வழித் தாக்குதல் ட்ரோன் நடமாட்டங்கள் தொடர்பான நிழற்படங்கள் மற்றும் காணொளிகளைத் தங்களின் கைத்தொலைபேசிகளில் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழேயே இவர்கள் ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அங்கு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் அபுதாபி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரவு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டனர்.
நாடுகடத்தப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த போது, அங்கு தயாராகவிருந்த குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் இருவரையும் உடனடியாகக் கைது செய்து வாக்குமூலங்களைப் பதிவு செய்யத் தொடங்கினர்.
இதனைத் தொடந்து, கைதானவர்களில் ‘மோதர சத்துர’ என அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர், மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு, நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, மற்றைய சந்தேகநபரான ‘புளூமெண்டல் சங்கா’ என்பவரிடம் விமான நிலையத்திலுள்ள குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் தொடர்ந்து தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.





